Wednesday, April 10, 2013
ராஜபாளையம் அருகே வேன் எரிந்து 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே எல்.பி.ஜி. கேஸ் பொருத்திய ஆம்னி வேன் மரத்தில் மோதி தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த பெயிண்டர்கள் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.
நெல்லை மாவட்டம், தென்காசி அருகேயுள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவர் பெயிண்ட்டிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். முத்தூட் பைனான்ஸ் கம்பெனிக்கு சுவர் விளம்பரங்கள் வரையும் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் முத்தூட் பைனான்ஸ் விளம்பரங்கள் வரைவதற்காக கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் லட்சுமணன் உள்பட 5 பெயிண்டர்கள் செங்கோட்டையில் இருந்து எல்.பி.ஜி. கேஸ் பொருத்திய ஆம்னி வேனில் புறப்பட்டனர். ஆம்னி வேனை லட்சுமணன் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு ராஜபாளையத்துக்கு முன்னதாக சேத்தூர் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது ஆம்னி வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் ஆம்னி வேனில் இருந்த எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் வெடித்து ஆம்னி வேன் முழுவதும் தீ பரவியது.
ஆம்னி வேனுக்குள் இருந்த பெயிண்ட் டின்களிலும் தீ பிடித்தததால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி வேன் முழுவதும் முற்றிலுமாக தீ பிடித்து எரிந்தது. இதில் வேனை ஓட்டி வந்த லட்சுமணன் (35) மற்றும் முருகன் (23), கல்யாணி (34), கோபால் (24), முத்துராஜ் (34) ஆகிய 5 பேரும் ஆம்னி வேனுக்குள் உடல் கருதி உயிர் இழந்தனர்.
தகவல் அறிந்த விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment