தென்காசி,
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண திருவிழா
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவலாயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 30–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, சமய சொற்பொழிவு, இரவு சுவாமி வீதி உலா நடந்தது. 9–ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேருக்கு உலகம்மன் எழுந்தருளினார்.
தேரோட்டம்
காலை 9.30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேர் இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10.45 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது